Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Monday, July 3, 2023

மிளகு ரசம் எளிதான முறையில் - Pepper Rasam

அதிக வேலையில்லாமல் எளிதான முறையில் இந்த ரசத்தை செய்யலாம். சளித்தொல்லை இருக்கும் சமயத்தில் இந்த ரசம் வைத்து சோறு சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

மிளகு - 15 எண்ணம்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 6 பற்கள்(சிறியது)
பெருங்காயப்பொடி - 1/8 டீஸ்பூன்
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - சிறிது
உப்பு - தே.அளவு
கறிவேப்பலை - சிறிது
மல்லி தழை - சிறிது

செய்முறை

முதலில் புளியை 1/2 கப் நீரில் ஊற வைக்கவும். மிக்ஸி ஜாரில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து ஒரு சுற்று ஓடவிடவும். மிளகு மற்றும் சீரகம் ஒன்றிரண்டாக உடைந்திருக்கும். இதனுடன் பூண்டு, பெருங்காயப்பொடி, மஞ்சள் மற்றும் தக்காளி சேர்த்து அரைத்து எடுக்கவும். அடுப்பில் வாணலி வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றவும், பின்பு கடுகு சேர்த்து வெடித்ததும் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்க்கவும். அதனுடன் ஊறவைத்திருக்கும் புளியை கரைத்து வடிகட்டி சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு நீர், உப்பு, கறிவேப்பலை சேர்த்து மூடி வைக்கவும். கொதித்து பொங்கி வரும் போது மல்லி தழை சேர்த்து இறக்கவும். சுவையான மிளகு ரசம் தயார்.




Wednesday, February 4, 2009

நண்டு மசாலா


தேவையான பொருட்கள் :

நண்டு - 2 பெரியது

தேங்காய் (துருவியது) - 1/2 கப்

சின்ன வெங்காயம் - 15

மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/8 டீ ஸ்பூன்

சீரகம் - 1/ டீ ஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கு

கடுகு - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவைக்கு


செய்முறை:

நண்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் சிறிது வதங்கிய பின் நண்டைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். இரண்டு நிமிடங்கள் கிளறவும். பின்பு வாணலியை மூடி வைத்து தீயை மெலிதாக வைக்கவும். இடைஇடையே கிளறி விடவும். 15 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும். நண்டில் இருக்கும் தண்ணீர் வற்றி வரண்டு வரும்போது தீயை அணைத்து விடவும். சாதத்துடன் பரிமாற நண்டு மசாலா தயார்.

Wednesday, October 15, 2008

இஞ்சி தீயல்


தேவையான பொருட்கள் :

இஞ்சி சிறிதாக நறுக்கியது - 1 கப்

தேங்காய் துருவல் - 1/2 கப்

மஞ்சள் - 1 டீ ஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 3 பல்

புளி - எலுமிச்சை அளவு

எண்ணெய் - தேவைக்கு

உப்பு - தேவைக்கு

கடுகு - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

புளியை 3/4 கப் நீரில் ஊற வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி துண்டுகளைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி தனியாக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் தேங்காய் துருவலை போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். வறுத்த தேங்காய், வறுத்த இஞ்சி, சீரகம், மஞ்சள், மிளகாய் தூள், மல்லித் தூள், பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். பின்பு கறிவேப்பிலை சேர்க்கவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்க்கவும். அதனுடன் புளிக் கரைசலைச் சேர்த்து உப்பையும் சேர்க்கவும். இந்த கலவை கொதிக்கும் வரை தீயை அதிகமாக வைக்கவும். கொதித்த பின்பு தீயைக் குறைத்து வைக்கவும். தீயல் நன்றாக வற்றி வரும் போது ( குழம்பு பதத்தில் இல்லாமல் சிறிது கெட்டியாயாக ) தீயை அணைத்து விடவும். இந்தத் தீயல் சாதத்துடன் சாப்பிட ஏற்ற ஒரு கூட்டு. இஞ்சியின் கசப்பு சுவை தெரிந்தால் சிறிது புளி கரைசல் சேர்த்துக் கொள்ளவும். 

Tuesday, September 23, 2008

சுறா மீன் புட்டு :


சுறா மீன் புட்டு முதல் முறையாக செய்தேன். இல்லத்தரசி அவர்களின் செய்முறையைப் பார்த்து செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. இல்லத்தரசியின் செய்முறை இங்கே.

தேவையான பொருட்கள் :

சுறா மீன் துண்டு - 300 கிராம்

வெங்காயம் ( பொடியாக நறுக்கியது ) - 3 அல்லது 4

பூண்டு ( பொடியாக நறுக்கியது ) - 6 பல்

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிது

மல்லித் தழை - சிறிது

முழு உளுந்து - 1 டீ ஸ்பூன்

கடுகு - 1/2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிது

சீரகம் - 1/2 டீ ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

சுறா மீன் துண்டுகளை சூடான நீரில் போட்டு 10-15 நிமிடங்கள் வேக வைக்கவும். அதனுடன் மஞ்சள் சேர்க்கவும். மீன் துண்டுகள் வெள்ளை நிறத்தில் மாறிவிட்டால் அது வெந்து விட்டது என்று அர்த்தம். மீன் துண்டுகளை தனியாக எடுத்து பரலாக/ உதிரியாக உதிர்த்து வைக்கவும்.


கடாயை சூடாக்கவும். அதில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பின்பு முழு உளுந்து மற்றும் சீரகம் சேர்த்து வறுக்கவும். அதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதனுடன் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். உதிர்த்து வைத்துள்ள சுறா மீனை அத்துடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறவும். உப்பு சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும். நறுக்கி வைத்துள்ள மல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.

Sunday, September 14, 2008

முட்டை தொக்கு:


தேவையான பொருட்கள்:

முட்டை - 2 எண்ணம்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பூண்டு - 2 பல்

இஞ்சி - சிறிய துண்டு

மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

தனியா தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

மல்லித் தழை - சிறிது

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - தேவைக்கு

கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

முட்டைகளை வேக வைத்து தோல் நீக்கவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு இவற்றை நீள வாக்கில் நறுக்கவும். இஞ்சியை பொடியாக நறுக்கவும். மல்லித் தழையையும் பொடியாக நறுக்கவும். கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். பின்பு கறிவேப்பிலையை சேர்க்கவும். அதனுடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டைச் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கிய பின்பு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து நன்கு வேகும் வரை மிதமான தீயில் வைக்கவும். நன்கு வெந்தபிறகு தீயை அணைத்து விட்டு வேக வைத்த முட்டைகளை ஒரு சில இடங்களில் கீறி வேக வைத்த கலவையுடன் சேர்க்கவும். முட்டைகளை ஒரு சில இடங்களில் கீறினால் தான் மசாலா முட்டையின் உள் சென்று சாப்பிடும் பொது நன்றாக இருக்கும். இறுதியில் நறுக்கிய மல்லித் தழையைச் சேர்த்து பரிமாறவும்.
இந்த முட்டை தொக்கு ஆப்பம், சப்பாத்தி, சாதம் போன்றவைகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Friday, August 22, 2008

மரவள்ளிக் கிழங்கு மசியல்

மரவள்ளிக் கிழங்கு நமது நாட்டில் விளையும் கிழங்குகளில் ஓன்று. இந்த மரவள்ளிக் கிழங்குகளிலே பல்வேறு வகை இருக்கின்றதாகக் கேள்விப்பட்டிருகிறேன். எனக்குத் தெரிந்த ஒரே மரவள்ளிக் கிழங்குவகை நூறு முட்டன் மட்டுமே. நூறு முட்டன் மரவள்ளிக் கிழங்கு எளிதாக வேகும் தன்மை கொண்டது. அதனால் தானோ என்னவோ எங்கள் ஊர் பக்கங்களில் நூறு முட்டன் மரவள்ளிக் கிழங்கு வகைகளையே பெரும்பான்மையோர் பயிருடுகின்றனர்.
மரவள்ளிக் கிழங்குக்கு தொட்டுக் கொள்ள மீன் குழம்பு தான் சரியான ஓன்று என்பது என் கருத்து . மரவள்ளிக் கிழங்கு + மீன் குழம்பு ருசியை அடிச்சிக்க முடியாது. ஒரு காலத்தில் எங்கள் ஊரில் உள்ள ஏழை மக்கள் அரிசி வாங்க முடியாத நிலையில் உள்ள மக்கள் வெறும் மரவள்ளிக் கிழங்கு + மீன் ( அந்த காலத்தில் மரவள்ளிக் கிழங்கு, மீன் மலிவாக இருந்திருக்கலாம் ) மட்டுமே சாப்பிட்டு வந்தார்கள் என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். மரவள்ளிக் கிழங்கு + மீன் இரண்டும் மிகுந்த சத்து நிறைந்ததாகவே கருதுகிறேன். " மீனும் கிழங்கும் சாப்பிட்டு வளர்ந்த உடம்பு. இதை ஒன்றும் செய்ய முடியாது " என்ற வீர வசனங்களையும் பெரியவர்கள் வாயிலிருந்து கேட்டிருக்கிறேன்.
இந்தக் கிழங்கை வேக வைத்து சாப்பிடும் பொது தொட்டுக் கொள்ள தேங்காய்த் துவையல், காய்ந்த மிளகாய் துவையல், மீன் குழம்பு போன்றவை ஏற்றதாக இருக்கும். மரவள்ளிக் கிழங்கு மசியல் செய்தால் தொட்டுக் கொள்ள எதுவும் இல்லாமலே சாப்பிடலாம். இந்த மசியல் மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஓன்று. இனி செய்முறையைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
மரவள்ளிக் கிழங்கு - 1 ( சிறியது )
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபில்ஸ்பூன்
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 1
செய்முறை:
மரவள்ளிக் கிழங்கை தொலுரித்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மரவள்ளிக் கிழங்கு துண்டுகளை போட்டு அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பாதி வெந்த பிறகு உப்பு சேர்க்கவும். கிழங்கு நன்கு வெந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு தண்ணீரை வடிகட்டவும். தேங்காய்த் துருவலை கிழங்குடன் சேர்த்து ஒரு கரண்டியின் உதவியுடன் நன்கு மசிக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். பின்பு அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். தாளித்த கலவையை மசித்து வைத்திருக்கும் கிழங்கில் சேர்க்கவும். எண்ணெய் சேர்க்க விரும்பாதோர் தாளிக்காமலே தேங்காய் சேர்த்து மசித்து வைத்திருக்கும் கிழங்கை சாப்பிடலாம். ருசியாகவே இருக்கும்.

Thursday, July 17, 2008

சென்னா கூனி (Baby Shrimp) பொரியல் :-

சென்னா கூனியை விரும்பாத ஆட்கள் கிடையாது. சில காலங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த சென்னா கூனி சிறிய இறால் வகையைச் சார்ந்தது. சென்னா கூனியை முருங்கை இலையுடன் சேர்த்து சமைப்பது தான் எங்கள் ஊர் வழக்கம். முருங்கை இலை இரும்புச்சத்துக்கு பெயர் போனது. முருங்கை இலை பொரியல் சிறிது கடுப்பு தன்மை கொண்டதால் சிலர் அதை விரும்பமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு சென்னா கூனியும் முருங்கை இலையும் சேர்த்து பொரியல் செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். முருங்கை இலையின் கடுப்பும் தெரியாது அதே சமயத்தில் இது மிகுந்த சத்தானதும் கூட.


தேவையான பொருட்கள் :

சென்னா கூனி - 250 கிராம்

முருங்கை இலை(உருவியது) - 1 1/2 கப்

தேங்காய் (துருவியது) - 1/2 கப்

சின்ன வெங்காயம் - 15

மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/8 டீ ஸ்பூன்

சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவைக்கு

செய்முறை:

சென்னா கூனியை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பரலாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் சிறிது வதங்கிய பின் சென்னா கூனி மற்றும் முருங்கை இலையைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். இரண்டு நிமிடங்கள் கிளறவும். பின்பு வாணலியை மூடி வைத்து தீயை மெலிதாக வைக்கவும். இடைஇடையே கிளறி விடவும். 15 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும். கூனி வறண்டு நல்ல மணம் கொடுக்கும். அப்பொழுது தீயை அணைத்து விடவும். சாதத்துடன் பரிமாற கூனி தயார். மீன்

Friday, July 11, 2008

மீன் குழம்பு (Fish Curry) :-


கடற்கரை மாவட்டம் என்பதாலோ என்னவோ கன்னியாகுமரி மக்கள் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு மீன். கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்யப்படும் உணவுகளில் தேங்காய் மிகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான சமையல் செய்யப்படுகிறது. அதைப் போன்றே தமிழ் நாட்டிலும் ஒவ்வொரு மாவாட்டத்திலும் வித்தியாசமான சமையல் செய்யப்படுகிறது. இந்த மீன் குழம்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்யப்படும் சமையல் வகையாகும். இனி இந்த மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
மீன் - 500gms
தேங்காய் - 3/4 கப்
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 5 பல்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
தனியா தூள் - 4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கு
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
மீனைக் கழுவி சுத்தம் செய்து அதைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். புளியை 1/2 கப் நீரில் ஊற வைக்கவும். தேங்காயுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு, வெந்தயம், ஓமம், தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைத்திருக்கும் மீனுடன் அரைத்த கலவையை சேர்க்கவும். அதனுடன் ஊற வைத்திருக்கும் புளியைக் கரைத்து வடிகட்டிய நீர், 1 1/2 கப் நீர் மற்றும் உப்பைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும். கொதிக்கும் வரை தீயை நன்கு வைத்து கொதித்த பின்பு தீயை குறைத்து வைக்கவும். குறைந்தது 20 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும். குழம்பு வற்றி வரும் போது தீயை அணைத்து விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து குழம்பில் சேர்க்கவும். மீன் குழம்பு தயார்.