Saturday, April 4, 2009

சமையல் குறிப்புகள் :

* பண்டிகை காலங்களில் பலகாரங்கள் சுட்ட எண்ணெய் கசடுடன் மீதமாகும். மூன்று நான்கு உருளைக் கிழங்குத் துண்டுகளை அதில் பொரித்தெடுத்தால் எண்ணெய் சுத்தமாகிவிடும்.

* முருங்கைக் காய்கள் முற்றி விட்டால் தூக்கி எறிந்து விட வேண்டாம். அவற்றின் விதைகளின் உள்ளே இருக்கும் பருப்புகளை வறுத்து உண்டால் நிலக்கடலையைப் போன்ற ருசி இருப்பதுடன் உடலுக்குப் போஷாக்கையும் வலுவையும் கொடுக்கும்.

* கொத்தமல்லிச் சட்னி மீந்து விட்டால் மோரில் சட்னியைக் கரைத்து விடுங்கள். மசாலா மோர் தயார்.

* மீந்து போன உருளை, வாழை சிப்ஸ்களை வீணாக்காமல் மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து பொரியலுக்குத் தூவினால் பொரியல் கூடுதல் ருசியுடன் இருக்கும்.

* ஜாம் செய்யும் போது அதில் ஆப்பிள் சில துண்டுகள் நறுக்கிப் போடுங்கள். ஏனெனில் ஆப்பிளிலுள்ள பெக்டின் என்னும் பொருள் ஜாம் தயார் ஆவதற்கு மிகவும் உதவுகிறது.

* உப்பு ஜாடியில் இரண்டு பச்சை மிளகாயைப் போட்டு வைத்தால் உப்பு நீர்த்துப் போகாது.

* வெண்டைக்காயின் காம்புகளையும் தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.

* நான்ஸ்டிக் தோசைக்கல்லை உபயோகித்தவுடன் சூடாக இருக்கும் போதே அதை ஒரு துணியால் அழுத்தித் துடைக்க வேண்டும். ஆறின பிறது லிக்விட் சோப்பு போட்டு கழுவி விட்டால் கல்லின் ஓரம் தடிமனாக ஆகாது.

* இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்து அதிகமாகிப் போய் இட்லி மிகவும் அமுங்கி மெல்லியதாக இருந்தால் சிறிதளவு ரவையை தண்ணீரில் பிசிறி ஊற வைத்து மாவுடன் கலந்து இட்லி வார்த்தால் பந்து பந்தாக மெதுவாக இருக்கும்.

* முருங்கை இலையை உருவியபின் எஞ்சி நிற்கும் ஈக்குகளை வீணாக்க வேண்டாம். அவைகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கை, கால், உடல் அசதிகள் நிற்கும். உடலில் பலமும் ஏறும்.