தேவையான பொருட்கள் :

புரோகோலி - 1

சின்ன வெங்காயம் - 10

மிளகாய்த் தூள் - 1டீ ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - சிறிது

செய்முறை :

புரோகோலி மற்றும் சின்ன வெங்காயத்தைச் சிறிதாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். பின்பு சிறிதாக வெட்டிய புரோகோலியை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.


பின்னர் சிறிதாக வெட்டி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு கிளறவும். அதனுடன் உப்பு மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து கிளறி 15 நிமிடங்கள் லேசான தீயில் வேகவிடவும். சுவையான ப்ரொகொலி பொரியல் ரெடி.

* பண்டிகை காலங்களில் பலகாரங்கள் சுட்ட எண்ணெய் கசடுடன் மீதமாகும். மூன்று நான்கு உருளைக் கிழங்குத் துண்டுகளை அதில் பொரித்தெடுத்தால் எண்ணெய் சுத்தமாகிவிடும்.

* முருங்கைக் காய்கள் முற்றி விட்டால் தூக்கி எறிந்து விட வேண்டாம். அவற்றின் விதைகளின் உள்ளே இருக்கும் பருப்புகளை வறுத்து உண்டால் நிலக்கடலையைப் போன்ற ருசி இருப்பதுடன் உடலுக்குப் போஷாக்கையும் வலுவையும் கொடுக்கும்.

* கொத்தமல்லிச் சட்னி மீந்து விட்டால் மோரில் சட்னியைக் கரைத்து விடுங்கள். மசாலா மோர் தயார்.

* மீந்து போன உருளை, வாழை சிப்ஸ்களை வீணாக்காமல் மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து பொரியலுக்குத் தூவினால் பொரியல் கூடுதல் ருசியுடன் இருக்கும்.

* ஜாம் செய்யும் போது அதில் ஆப்பிள் சில துண்டுகள் நறுக்கிப் போடுங்கள். ஏனெனில் ஆப்பிளிலுள்ள பெக்டின் என்னும் பொருள் ஜாம் தயார் ஆவதற்கு மிகவும் உதவுகிறது.

* உப்பு ஜாடியில் இரண்டு பச்சை மிளகாயைப் போட்டு வைத்தால் உப்பு நீர்த்துப் போகாது.

* வெண்டைக்காயின் காம்புகளையும் தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.

* நான்ஸ்டிக் தோசைக்கல்லை உபயோகித்தவுடன் சூடாக இருக்கும் போதே அதை ஒரு துணியால் அழுத்தித் துடைக்க வேண்டும். ஆறின பிறது லிக்விட் சோப்பு போட்டு கழுவி விட்டால் கல்லின் ஓரம் தடிமனாக ஆகாது.

* இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்து அதிகமாகிப் போய் இட்லி மிகவும் அமுங்கி மெல்லியதாக இருந்தால் சிறிதளவு ரவையை தண்ணீரில் பிசிறி ஊற வைத்து மாவுடன் கலந்து இட்லி வார்த்தால் பந்து பந்தாக மெதுவாக இருக்கும்.

* முருங்கை இலையை உருவியபின் எஞ்சி நிற்கும் ஈக்குகளை வீணாக்க வேண்டாம். அவைகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கை, கால், உடல் அசதிகள் நிற்கும். உடலில் பலமும் ஏறும்.


தேவையான பொருட்கள் :

நண்டு - 2 பெரியது

தேங்காய் (துருவியது) - 1/2 கப்

சின்ன வெங்காயம் - 25

மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன்

சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கு

கடுகு - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவைக்கு

செய்முறை:

நண்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் சிறிது வதங்கிய பின் நண்டைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். இரண்டு நிமிடங்கள் கிளறவும். பின்பு வாணலியை மூடி வைத்து தீயை மெலிதாக வைக்கவும். இடைஇடையே கிளறி விடவும். 15 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும். நண்டில் இருக்கும் தண்ணீர் வற்றி வரண்டு வரும்போது தீயை அணைத்து விடவும். சாதத்துடன் பரிமாற நண்டு மசாலா தயார்.

இஞ்சி தீயல்  

Posted by MJS in ,


தேவையான பொருட்கள் :

இஞ்சி சிறிதாக நறுக்கியது - 1 கப்

தேங்காய் துருவல் - 1/2 கப்

மஞ்சள் - 1 டீ ஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 3 பல்

புளி - எலுமிச்சை அளவு

எண்ணெய் - தேவைக்கு

உப்பு - தேவைக்கு

கடுகு - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

புளியை 3/4 கப் நீரில் ஊற வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி துண்டுகளைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி தனியாக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் தேங்காய் துருவலை போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். வறுத்த தேங்காய், வறுத்த இஞ்சி, சீரகம், மஞ்சள், மிளகாய் தூள், மல்லித் தூள், பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். பின்பு கறிவேப்பிலை சேர்க்கவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்க்கவும். அதனுடன் புளிக் கரைசலைச் சேர்த்து உப்பையும் சேர்க்கவும். இந்த கலவை கொதிக்கும் வரை தீயை அதிகமாக வைக்கவும். கொதித்த பின்பு தீயைக் குறைத்து வைக்கவும். தீயல் நன்றாக வற்றி வரும் போது ( குழம்பு பதத்தில் இல்லாமல் சிறிது கெட்டியாயாக ) தீயை அணைத்து விடவும். இந்தத் தீயல் சாதத்துடன் சாப்பிட ஏற்ற ஒரு கூட்டு. இஞ்சியின் கசப்பு சுவை தெரிந்தால் சிறிது புளி கரைசல் சேர்த்துக் கொள்ளவும்.


சுறா மீன் புட்டு முதல் முறையாக செய்தேன். இல்லத்தரசி அவர்களின் செய்முறையைப் பார்த்து செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. இல்லத்தரசியின் செய்முறை இங்கே.

தேவையான பொருட்கள் :

சுறா மீன் துண்டு - 300 கிராம்

வெங்காயம் ( பொடியாக நறுக்கியது ) - 3 அல்லது 4

பூண்டு ( பொடியாக நறுக்கியது ) - 6 பல்

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிது

மல்லித் தழை - சிறிது

முழு உளுந்து - 1 டீ ஸ்பூன்

கடுகு - 1/2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிது

சீரகம் - 1/2 டீ ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

சுறா மீன் துண்டுகளை சூடான நீரில் போட்டு 10-15 நிமிடங்கள் வேக வைக்கவும். அதனுடன் மஞ்சள் சேர்க்கவும். மீன் துண்டுகள் வெள்ளை நிறத்தில் மாறிவிட்டால் அது வெந்து விட்டது என்று அர்த்தம். மீன் துண்டுகளை தனியாக எடுத்து பரலாக/ உதிரியாக உதிர்த்து வைக்கவும்.


கடாயை சூடாக்கவும். அதில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பின்பு முழு உளுந்து மற்றும் சீரகம் சேர்த்து வறுக்கவும். அதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதனுடன் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். உதிர்த்து வைத்துள்ள சுறா மீனை அத்துடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறவும். உப்பு சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும். நறுக்கி வைத்துள்ள மல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.


தேவையான பொருட்கள்:

முட்டை - 2 எண்ணம்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பூண்டு - 2 பல்

இஞ்சி - சிறிய துண்டு

மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

தனியா தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

மல்லித் தழை - சிறிது

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - தேவைக்கு

கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

முட்டைகளை வேக வைத்து தோல் நீக்கவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு இவற்றை நீள வாக்கில் நறுக்கவும். இஞ்சியை பொடியாக நறுக்கவும். மல்லித் தழையையும் பொடியாக நறுக்கவும். கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். பின்பு கறிவேப்பிலையை சேர்க்கவும். அதனுடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டைச் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கிய பின்பு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து நன்கு வேகும் வரை மிதமான தீயில் வைக்கவும். நன்கு வெந்தபிறகு தீயை அணைத்து விட்டு வேக வைத்த முட்டைகளை ஒரு சில இடங்களில் கீறி வேக வைத்த கலவையுடன் சேர்க்கவும். முட்டைகளை ஒரு சில இடங்களில் கீறினால் தான் மசாலா முட்டையின் உள் சென்று சாப்பிடும் பொது நன்றாக இருக்கும். இறுதியில் நறுக்கிய மல்லித் தழையைச் சேர்த்து பரிமாறவும்.
இந்த முட்டை தொக்கு ஆப்பம், சப்பாத்தி, சாதம் போன்றவைகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

தினமலர் நாளிதழில் வெளிவந்திருந்த, ஸ்பெயினில் நடைபெற்ற தக்காளித் திருவிழா புகைப்படங்களைப் பார்த்த போது எனக்கு மிகவும் வித்தியாசமாகவும் விநோதமாகவும் தோன்றியது. அந்தப் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.