Showing posts with label fish curry. Show all posts
Showing posts with label fish curry. Show all posts

Wednesday, January 10, 2024

மீன் தொக்கு/Fish curry without Tamarind

தேவையான பொருள்கள்

முள் இல்லாத மீன் துண்டுகள் -250 கிராம்

சின்ன வெங்காயம் - 10 எண்ணம்

தக்காளி - 1

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்

மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்

பூண்டு - 6 பல்

இஞ்சி - 1/2 இஞ்ச் துண்டு

நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு



செய்முறை

மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில், சுத்தம் செய்து வைத்துள்ள மீனுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். மீன் வெந்துவிட்டதா என்பதை அறிய ஒரு துண்டை வெட்டிப்பார்க்கவும். மீன் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். 

வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை இடிகல்லில் சேர்த்து இடித்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். வெங்காயத்தைச் சேர்த்து ஒரிரு நிமிடங்கள் வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். 

தக்காளி மசிந்தவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். இவற்றுடன் சிறிதளவு உப்பு சேர்க்கவும். ஏற்கெனவே மீனில் உப்பு சேர்த்திருப்பதால் சிறிதளவே உப்பு சேர்க்கவும். வேகவைத்த மீன்துண்டுகளை அதிலிருக்கும் தண்ணீரிலிருந்து வடிகட்டிக்கொள்ளவும். 

வடிகட்டிய தண்ணீரை, வதக்கிக்கொண்டிருக்கும் வெங்காயம் தக்காளி மசாலாவுடன் சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தவுடன் வேகவைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் மூடி வைத்து வேகவைத்து, அடுப்பிலிருந்து இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Friday, July 11, 2008

மீன் குழம்பு (Fish Curry) :-


கடற்கரை மாவட்டம் என்பதாலோ என்னவோ கன்னியாகுமரி மக்கள் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு மீன். கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்யப்படும் உணவுகளில் தேங்காய் மிகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான சமையல் செய்யப்படுகிறது. அதைப் போன்றே தமிழ் நாட்டிலும் ஒவ்வொரு மாவாட்டத்திலும் வித்தியாசமான சமையல் செய்யப்படுகிறது. இந்த மீன் குழம்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்யப்படும் சமையல் வகையாகும். இனி இந்த மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
மீன் - 500gms
தேங்காய் - 3/4 கப்
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 5 பல்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
தனியா தூள் - 4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கு
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
மீனைக் கழுவி சுத்தம் செய்து அதைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். புளியை 1/2 கப் நீரில் ஊற வைக்கவும். தேங்காயுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு, வெந்தயம், ஓமம், தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைத்திருக்கும் மீனுடன் அரைத்த கலவையை சேர்க்கவும். அதனுடன் ஊற வைத்திருக்கும் புளியைக் கரைத்து வடிகட்டிய நீர், 1 1/2 கப் நீர் மற்றும் உப்பைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும். கொதிக்கும் வரை தீயை நன்கு வைத்து கொதித்த பின்பு தீயை குறைத்து வைக்கவும். குறைந்தது 20 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும். குழம்பு வற்றி வரும் போது தீயை அணைத்து விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து குழம்பில் சேர்க்கவும். மீன் குழம்பு தயார்.